அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை இந்த உலகமே அறிந்தது. அப்பாவி மக்களை மேலும் தம் சொந்த நாட்டு மக்களை போர் என்ற பெயரில் லட்சக்கணக்கில் கொன்று குவித்தது ராஜபக்சே அரசு. இதை உணர்ந்த அனைத்து நாடுகளும் இலங்கையை கண்டித்து வரும் நிலையில், இந்தியா மட்டும் உறவை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது.
தமிழர்கள் மீது வன்முறை, கொலை செய்தல், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை, சிறையில் அடைப்பது இன்னும் தொடர்கிறது. எனவே காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பாக கனடா நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே, ஐ.நா.வின் சார்பில் நவிப்பிள்ளை இலங்கை அரசு மீது பல்வேறு குற்றங்களைத் தெரிவித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டை இந்தியாவும் புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை இந்தியா ஏற்பதற்கு கனடா நாட்டு பிரதமர் தெரிவித்துள்ள கருத்துகளே போதுமானது.
தமிழர்கள் மீது அக்கறை கொண்டு இந்தியா காமன்வெல்த் மாநாட்டு புறக்கணிப்பு முடிவை எடுப்பது அங்கே வாழும் தமிழர்கள் மீது மேலும் கவனத்தையும் பாதுகாப்பையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
சல்மான் குர்ஷித் இலங்கை பயணம் கண்துடைப்பான ஒன்று. இதன்மூலம் தமிழர்களுக்கு அவர்களின் சமஉரிமை நிலைநாட்டப்படப் போவதில்லை. தமிழக மீனவர்களின் 30 படகுகளை இலங்கை அரசு கைப்பற்றி அவைகளை தங்கள் நாட்டின்சொத்தாக அறிவிக்க முயற்சி செய்து வருகிறது. சல்மான் குர்ஷித் இலங்கையை வலியுறுத்தி நம்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
Post a Comment