மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று முந்தினம் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தினை வறுமை நிலைக்கு கொண்டுசெல்வதில் சில நிறுவனங்களின் செயற்பாடுகளும் முக்கிய காரணமாக அமைவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நுண்கடன் வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடலிலேயே இவ் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுகடன் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு மாவட்ட செயலகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு அமைவாகவே செயற்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொது மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கு 5 வீதம் முதல் 12 வீதம் வரையிலேயே வட்டியினை அறவிடமுடியும். அத்தடன் வருடாந்தவட்டி 12 வீதமாக இருக்க வேண்டும். வாராந்த வட்டி அறவிட முடியாது.
மத்திய வங்கியின் ஒழுங்கு விதிகளுக்கமைவாக மாத்திரமே கடன்கள் வழங்க முடியும் அத்துடன், மத்திய வங்கியின் அனுமதி கட்டாயமானது, வெறுமனே கம்பனிகளின் பதிவுகளை பாவித்து கடன்கள் வழங்க முடியாது. மத்திய வங்கியின் வழிகாட்டல் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
நகல்கள் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும். கடன்கள் வழங்குவதில் விதிக்கப்படும் நிபந்தனைகள் குறைக்கப்படவேண்டும். அதாவது மக்களைப் பாதிக்கின்ற வகையில் இவை அமையக்கூடாது.
கடன்கள் வழங்குதல், மற்றும் அறவீடுகள், அது தொடர்பான கூட்டங்கள் நடத்துவது பிரதேச செயலாளர் கிராம சேவையாளர்களது அனுமதியுடனும், அரசாங்க அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில் நடைபெறவேண்டும். அத்துடன் மாதாந்தம் பிரதேச செயலகங்களில் நடைபெறும் கூட்டங்களிலும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் நிதி வழங்கும் நிறுவனங்கள் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ் விசேட கூட்டத்தில் கிழக்குமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும், மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மத்திய வங்கியின் கிழக்குப்பிராந்திய இணைப்பாளர் டி.டி.ஏ.தர்மகீர்த்தி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் சார்பில் அவரது இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.
அத்துடன், பிரதேச செயலாளர்கள், நிதிவழங்கும் நிறுவனங்கள், உதவி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்டத்தில் வறுமை நிலையிலுள்ள மக்களை மேலும் வறியவர்களாகவும், கடன் காரர்களாகவும் ஆக்கி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துவது நிதி நிறுவனங்களே என்றும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் புதிய விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் புதிய விதிகள் அரசாங்க அதிபரால் அறிவிக்கப்பட்டன.
இவற்றினைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள் மாவட்டத்தில் இயங்க முடியாதென்றும் மீறுபவர்களுக்கெதிராக பொலிஸார் நடவடிக்கையினை எடுப்பர் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment