இந்தியாவில் 5வது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நடக்கிறது. ராஞ்சியில் நேற்று நடந்த பி பிரிவு லீக் போட்டியில் சென்னை (இந்தியா), டைட்டன்ஸ் (தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித்தலைவர் டோனி பந்துவீச்சை தெரிவு செய்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்தது.
ருடால்ப், பெகர்டியன் தலா 21 ஓட்டங்களும், அரைசதம் கடந்து டேவிட்ஸ் 52 ஓட்டங்களும், டிவிலியர்ஸ் 7 சிக்சர், 3 பவுண்டரியுடன் 77 ஓட்டங்களும் எடுத்தனர்.
கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே ஷாக் கொடுத்தார் மெர்வி. இவரது மூன்றாவது பந்தில் முரளி விஜய் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார்.
இதற்கு பின் மைக்கேல் ஹசி, ரெய்னா சேர்ந்து தூள் கிளப்பினர். டைட்டன்ஸ் பந்துவீச்சை சிதறடித்த இவர்கள், புயல் வேகத்தில் ஓட்டங்கள் சேர்த்தனர்.
மோர்னே மார்கல் வீசிய போட்டியின் 4வது ஓவரில் ரெய்னா ஒரு சிக்சர், ஹசி 3 பவுண்டரி மற்றும் வைடு மூலம் 5 ஓட்டங்கள் கிடைக்க மொத்தம் 24 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன.
இதையடுத்து 4 ஓவரிலேயே சென்னை அணி 51 ஓட்டங்களை எட்டியது. ரெய்னா 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
மீண்டும் பந்துவீச வந்த மார்கல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த ஹசி 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
பின் பத்ரிநாத், பிராவோ சேர்ந்து ஓட்டங்கள் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டனர். மெர்வி பந்தில் பிராவோ ஒரு இமாலய சிக்சர் அடித்தார். தொடர்ந்து லாங்கே ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த இவர், 38 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.
அடுத்து தனது பிறந்த ஊரில், உள்ளூர் ரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் களமிறங்கினார் டோனி. சந்தித்த முதல் நான்கு பந்தில் இவர் ஓட்டங்கள் எடுக்க தவற, ரசிகர்கள் டென்ஷன் ஆகினர்.
பின் மார்னே மார்கல் பந்தில் சிக்சர் அடித்த டோனி 7 ஓட்டங்களில் ரிச்சர்ட்ஸ் பந்தில் வீழ்ந்தார். இதே ஓவரில் ரவிந்திர ஜடேஜாவும் ஓட்டங்ளின்றி ஆட்டமிழந்தார். இப்படி திடீரென விக்கெட் சரிய, லேசாக மழையும் பெய்ய, பதட்டம் ஏற்பட்டது.
ஆனால், ரிச்சர்ட்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஆல்பி மார்கல் சுலப வெற்றியை உறுதி செய்தார்.
சென்னை அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 187 ஓட்டங்கள் எடுத்து இத்தொடரில் அதிகபட்ச ஸ்கோருடன் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்டமிழக்காமல் பத்ரிநாத் 20 ஓட்டங்களும், ஆல்பி மார்கல் 4 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆட்டநாயகன் விருதை ரெய்னா தட்டிச் சென்றார்.