இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வட கிழக்கு மாகாண சபை இரண்டாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது தேர்தலின் பின் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒருவருட பூர்த்தியை எட்டியுள்ளது.
இந்த மாகாணசபையில் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றிபெற்று எதிர்கட்சியில் இருந்து கொண்டு செயல்பட்டுவருகின்றது.
இக் காலகட்டத்தில் மாகாணசபையின் சகல திணைக்களங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் தங்களது கடமைகளைச் சிறப்பான முறைமையில் செயலாற்றியுள்ளது பாராட்டுக்குரியதாகும்.
இதேவேளை ஒருசில மக்கள் பிரதிநிதிகள் கூட சிறப்பான முறைமையில் மக்களுக்கு சேவையை ஆற்றிவருவது மக்களின் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்ப்படுத்தியுள்ளது.
இத்தகையதொரு சூழலில் ஒருசில அமைச்சுக்களின் நடப்பாண்டிற்கான நிதிஒதுக்கீடுகளிலும், அமைச்சின் சிற்றூழியர் நியமனங்களிலும், பாரபட்சமானதும் ஒருபக்கச்சார்பானதும் இனரீதியானதும் பிரதேசரீதியானதுமான முறையில் இனவிகிதாசாரப் பரம்பலை கவனத்தில் கொள்ளாமல் முறைகேடான முறைமையில் ஆளும்தரப்பு நடந்துகொண்டுள்ளதன் மூலம் தமிழ் மக்கள் தமிழ் பிரதேசங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை மிகுந்த வேதனைக்குரியது.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கிழக்கு மாகாணசபையின் நடப்பாண்டிற்கான பின்வரும் அமைச்சுக்களின் நிதிஒதுக்கீடுகளை குறிப்பிடலாம்.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு 2013 ஆண்டு ஆயிரம் பாடசாலை திட்டத்திற்கென மொத்தம் 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டன. இதில் அம்பாரை மாவட்டச் சிங்களப் பாடசாலைகளுக்கு 30 மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு மாவட்டப்பாடசாலைகளுக்கு 5 மில்லியன் ரூபாவும் திருகோணமலை மாவட்ட பாடசாலைகளுக்கு 5 மில்லியன ரூபாவும் ஒதுக்ப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சு துறைசார்ந்த அபிவிருத்திக்கு (பிஎஸ்டி)
நிதி ஒதுக்கீட்டில் இருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு 69 மில்லியன் ரூபாவும் அம்பாரை மாவட்டத்திற்கு 99 மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 52 மில்லியன் ரூபாவும் ஒதுக்கியுள்ளது.
உள்ளராட்சி அமைச்சு திருகோணமலை மாவட்டத்திற்கு 32 மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 24 மில்லியன் ரூபாவும் அம்பாரை மாவட்டத்திற்கு 31 மில்லியன் ரூபாய்வும் ஒதுக்கி உள்ளது.
சமச்சீரான பிராந்திய அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் 10 கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளபோதும் இங்கும் கூட இத்தகைய சமச்சீரற்ற தெரிவுமுறையே காணப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 தமிழ் கிராமங்களும் 2 முஸ்லிம் கிராமங்களும் உள்ளடக்கப்பட்டுன. அம்பாரை மாவட்டத்தை பொறுத்த மட்டில் 3 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும் இவற்றில் 2 முஸ்லிம் கிராமங்களும் ஒரு சிங்களக்கிராமமும் தேர்தெடுக்கப்பட்டுள்ளன
நிதி முகாமையைப் பொறுத்தமட்டில் நீதியானதும் நேர்மையானதுமான முறையில் இக்கொள்கை பின்பற்றப்படவில்லை.
1) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இனவிகிதாசாரம் பேணப்படாமை.
2) எல்லை புறப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்குரிய மேய்ச்சற் தரையை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கத்தவறியமை.
3) வறுமை ஒழிப்புத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட இடங்கள் ஒருபக்கச்சார்பான முறையில் தெரிவு செய்யப்பட்டமை.
4) மீள்குடியமர்வு விடயத்தில் சம்பூர் வலையிறவு புணாணை கெவிளியாமடு மக்கள் புறக்கணிக்கப்பட்டதோடு சம்புர் மக்களுக்கு உலர் உணவு வழங்கத்தவறியமை.
5) மத்திய அரசால் நடப்பாண்டிற்காக கிழக்கு மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் இன்றுவரை அரைவாசி பகுதியே கிடைக்கப்பெற்றுள்ளது. வருட இறுதிக் கட்டத்தை அடைந்த போதிலும் மிகுதித்தொகை இதுவரை ஒதுக்கப்படவில்லை.
இதனால் மாகாணசபையின் செயல்பாடுகளில் ஸ்தம்பித நிலையை எட்டியுள்ளதோடு மிகுதித்தொகையை பெறுவதற்கு ஆளும்தரப்பு தயக்கம்காட்டி வருகின்றது.
6) சில அமைச்சினால் வழக்கப்பட்ட சிற்றூழியர் நியமனத்தின்போது இனவிகிதாசாரம் பேணப்படவில்லை. இதன் காரணமாக ஆளும்தரப்பால் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இவ் அமைச்சுகளில் நீண்டகாலமாக வேலைசெய்யும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவும் தமிழ் ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளார்கள்.
7) மூவினமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்குமாகாணசபை கட்டடத்தினுள் ஒரு இனத்தின் பண்பாட்டுச் சின்னம் மாத்திரமே திணிக்கப்பட்டுள்ளது.
8) கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல்தரைக் காணிகளையும், புல்மோட்டையிலுள்ள பல காணிகளையும், புதைபொருள் ஆராட்சிக்கென பல காணிகளையும் சம்பூர் காணிகளையும் மாகாணத்தின் ஆலோசனை இல்லாமல் மத்திய அரசு கையாள்வதை அனுமதித்தது தவறானது.
9) 13வது திருத்தச்சட்டத்திலுள்ள உள்ளுராட்சிக்குரிய அதிகாரங்களை முதலமைச்சர் முழுமையாக அமுல்படுத்தத் தவறியமை.
10) கடந்த யுத்தகாலத்தின் போது விதவையாக்கப்பட்ட, அங்கவீனம் அடைந்த, அனாதையாக்கப்பட்டவர்களுக்கு விசேட நிதி ஒதுக்கப்படாமை.
11) கடந்த காலங்களில் மாகாணசபையில் இடம்பெற்ற நிதி முறைகேடுகளை உரியமுறையில் கணக்காய்வுப்பிரிவு சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்கத்தவறியமை.
போன்ற பல்வேறு விடயங்கள் எந்த மக்களுக்காக இந்த மாகாணசபை அமைக்கப்பட்டதோ அந்தமக்களை இந்த மாகாணசபையின் பலாபலன்கள் சென்றடையவில்லை.
திட்டமற்ற செயல்பாடுகளும் முறையற்ற முகாமைத்துவமும் மோசமான ஊழல்கள் நிறைந்த நடவடிக்கைகளும் இம்மாகாணத்தில் தொடந்து கொண்டேசெல்கின்றன.
மாகாணசபையின் இத்தகைய செயல்பாடுகளை உடன் தடுத்துநிறுத்தி நல்லாட்சிக்கான நடவடிக்கையை முன்நெடுக்க தவறுகளை திருத்திக்கொள்ளுமாறு அறைகூவல்விடுக்கின்றேன்.
Post a Comment