ஆசிய கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் திரிமான மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் வெற்றி பெற்ற இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனானது.
பங்களாதேஷில் இடம்பெற்ற 12ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில்
5 அணிகள் பங்கேற்றன. இந்தியா (2 வெற்றி, 2 தோல்வி), பங்காளதேஷ் (4 தோல்வி), ஆப்கானிஸ்தான் (ஒரு வெற்றி, 3 தோல்வி) ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
லீக் சுற்றில் தோல்வியையே சந்தித்திராத இலங்கை அணி பாகிஸ்தானை 12 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இந்தியாவை 2 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 129 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், பங்களாதேஷ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடையச் செய்தது.
இலங்கையுடன் மாத்திரம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை 72 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், பங்களாதேஷ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கொண்டிருந்தது. இதனையடுத்து இலங்கையும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதிய இறுதி ஆட்டம் மிர்பூரில் இன்று சனிக்கிழமை அரங்கேறியது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அந்தவகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சார்ஜில் கான் 8, அகமட் செய்சாட் 5 என சொற்ப ஓட்டங்களுடன் மாலிங்க பந்து வீச்சில் ஆட்டமிழக்க அடுத்த களமிறங்கிய ஹாபிசும் 3 ஓட்டங்களுடன் மாலிங்க பந்து வீச்சில் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.
18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் ஆரம்பமே தடுமாறிய போது மிஸ்பா உல் ஹக்குடன் பவாட் ஆலம் கைகோர்த்தார். இருவரும் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியை வலுப்பெற செய்தனர்.
இருவரும் இணைப்பாட்டமாக 122 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச் சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த மிஸ்பா உல் ஹக் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களத்தில் இருந்த பவாட் ஆலத்துடன் உமர் அக்மால் இணைந்தார். உமர் அக்மால் அதிரடியாக துடுப்பெடுத்தாட பவாட் ஆலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதலாவது சதத்தை கடந்து 114 ஓட்டங்களை கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்தார்.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய உமர் அக்மால் பவாட் ஆலத்துடன் இணைப்பாட்டமாக 115 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச் சதத்தை கடந்து 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இலங்கை அணியில் சுரங்க லக்மால், சேனாநாயக, திசர பெரேரா மற்றும் மெத்யூஸ் ஆகியோர் பந்து வீச்சை மேற்கொண்டிருந்த போதும் மாலிங்க மாத்திரமே 10 ஓவர்கள் வீசி 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இதன் பின்னர் 261 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக திரிமனேவுடன் குசேல் ஜனித் பெரேரா களமிறங்கியனார்.
இதன்போது குசேல் ஜனித் பெரேர அதிரடியாக துடுப்பெடுத்தாடி 37 பந்துகளில் 6 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
தொடர் முழுதும் இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் பக்கபலமாக இருந்த குமார் சங்கக்கார இப்போட்டியில் வந்த வேகத்திலேயே அரங்கு திரும்பி ஏமாற்றமளித்தார். அவர் சயிட் அஜ்மால் பந்தில் எவ்வித ஓட்டமும் பெறாது எல்.பி.டபிள்யு. முறையில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களத்தில் இருந்த திரிமானவுடன் கைகோர்த்தார் மஹேல ஜயவர்தன. கடந்த தொடர்களில் பிரகாசிக்காத மஹேல இன்றைய போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடினால். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த திரமான அரைச் சதத்தை கடக்க சற்று நேரத்தில் மஹேல ஜயவர்தனவும் அரைச்சதத்தை கடந்தார்.
இருவரும் 3ஆவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக 156 ஓட்டங்களை பெற்றிருந்த போது மஹேல ஜயவர்தன 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து திரிமானவுடன் அசான் பிரியன்ஜன் இணைந்தார். இதன் போது லஹிரு திரிமான சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 3ஆவது சதத்தை கடந்தார். அவர் 106 பந்துகளில் 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 100 ஓட்டங்களை பெற்றார்.
பிரியன்ஜன் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சதத்தை கடந்த திரிமான 101 ஓட்டங்களுடன் அஜ்மால் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து மெத்தியூஸ் ஆட்டமிழக்காது 16 ஓட்டங்களை பெற்று அணி வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
போட்டியின் ஆட்டநாயகனாக மாலிங்க தெரிவு செய்யப்பட்டதோடு தொடர் ஆட்டநாயகனாக லஹிரு திரிமான தெரிவு செய்யப்பட்டார்.
Post a Comment