மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரின் பொதுநூலகத்தினையும் காந்திப்பூங்காவையும் இணைக்கும் வகையில் இந்த இலத்திரனியல் விளம்பரப்பலகை அமைக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் விளம்பரப்பலகை திறப்புக்கு இணைவாக பொதுநூலகத்தில் ஈ.பத்திரிகை பார்வையிடுவதற்கான கணிணி நிலையமும் திறந்துவைக்கப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி மன்றத்தின் ஊடாக கொய்க்கா திட்டத்தின் கீழ் சுமார் 10இலட்சம் ரூபா இதற்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் ஆசிய மன்றத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிட பிரதிநிதி ஜொஹான் ரொபட்,சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி லிசா ஹீக்,திட்ட இணைப்பாளர் ஹொருட்னி பிரவுன் மற்றும் சிவில் சமூக பிரநிதிகள்,மாவட்ட வர்த்தக சங்கள் பிரதிநிதிகள்,மாநகரசபையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் முதல் நிகழ்வாக மட்டக்களப்பு பொதுநூலகத்தின் பத்திரிகை பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஈ பத்திரிகை பகுதி திறந்துவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இலத்திரனியல் விளம்பரப்பலகை திறந்துவைக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் இதன்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியும் காண்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் உள்ள வியாபாரிகள் தங்களது வியாபார நிலையங்களின் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் பொழுது போக்கும் வகையிலான நிகழ்வுகளை ஒளிபரப்பும் வகையில் இந்த இலத்திரனியல் விளம்பர பலகை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் உதயகுமார் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் பெரும் நன்மையாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்களும் உல்லாசப்பயணிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment