இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரரான அன்னை தெரெசாவின் 16வது நினைவு தினம் இன்று.
அன்புக்கு உருவம் இருந்தால் அது இப்படித்தான் இருக்கும் என்று உலகத்தார் போற்றும் படி, அன்பை மட்டுமே தன் வாழ்வின் இலட்சியமாய், ஆதாரமாய் கொண்டு, மனிதனால் இப்படியும் வாழ முடியும் என்று உலகிற்கு உணர்த்தியவர் அன்னை தெரேசா
குட்டையான உருவம், முகத்தில் சுருக்கம், எப்போதும் நீலக் கோடுகளைக் கொண்ட தூய்மையான வெள்ளையாடை, முகத்தில் எப்போதும் புன்னகை இவற்றை தாங்கியபடி உலக மக்களின் இதயத்தில் அன்னையாய் நீங்கா இடம் பிடித்தவர் தெரேசா.
இந்த மகத்துவம்மிக்க மனிதநேயம் மரணித்து (05.09.997) இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்ற போதும், இன்னும் உலகத்தார் நினைவில் நீங்காது தன்நிகரற்ற பெண்மணியான வாழ்ந்து வருகிறார்.
1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி அல்பேனியா நாட்டின் ஸ்கோப்ஜே என்ற குக்கிராமத்தில் பொஜாஸியு டிரேன், நிக்கோலா தம்பதியினருக்கு கடைசி வாரிசாக அவதரித்தவர் தெரேசா.
ஞானஸ்நானத்தின் வழியே ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற இனிய நாமத்தை சூடிக் கொண்டார்.
தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்து பல்வேறு சோகங்களையும் சந்தித்தார் அன்னை.
இறைபக்தியிலும் சமூக சேவையிலும் நாட்டம் கொண்ட தன் தாயின் வழியில் சிறு வயது முதலே அன்னையின் மனமும் சென்றது.
தனது பங்கு ஆலயத்தில் பல புனிதர்களின் தியாகம்மிக்க வரலாறுகளை படித்தறிந்ததன் மூலம் அதன் வழியே மக்களுக்கு சேவைகள் புரிவது குறித்து உணர்ந்து கொண்டார்.
சிறு வயதிலேயே அருட் சகோதரியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக பதியவைத்தார் அன்னை, அதன்படியே 1928 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பதினெட்டாவது வயதில் தனது தாய் மற்றும் பங்குத் தந்தையின் ஆசியுடன் துறவறப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து அயர்லாந்தில் உள்ள லொரேடோ புனித கன்னிமரியாள் சபையில் சேர்ந்து பணியாற்ற தீர்மானித்தார்.
இச்சபையின் துறவிகளை "பிரசங்க கன்னியர்´ என அழைப்பர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா சென்று பணியாற்றும்படி இவருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆகவே 1929ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி பாரத தேசத்தின் கல்கத்தா நோக்கி பயணமானார். இது தான் அவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்த விடயமும் கூட.
அங்கு சென்ற இவர் தனது துறவற மடத்தின் வேண்டுகோளின்படி இறையியல் படிப்பையும், ஆசிரியர் பயிற்சியையும் மேற்கொண்டார்.
அதே ஆண்டு மே மாதம் 23ம் திகதி தனது "அர்ப்பண உறுதி´ வார்த்தைப்பாட்டின் போது அக்னஸ், புனித குழந்தை திரேசாவின் கன்னிமை வாழ்வின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை திரேசா எனத் மாற்றிக் கொண்டார்.
அத்துடன் கல்கத்தாவில் புனித மரியாள் பெண்கள் பாடசாலையில் சில காலம் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றினார்.
1931 ஆம் ஆண்டு மார்ச் 24ம் திகதி அருட் சகோதரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 1937 ஆம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி இறுதி அர்ப்பண உறுதி வார்த்தைப்பாட்டினை வழங்கினார்.
அன்னையவர்கள் 1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10ம் திகதி தனது வருடாந்த ஞான ஒடுக்கத்திற்காக டார்ஜிங் சென்று திரும்புகையில் அவருக்கான இறையழைத்தல் வேறாக இருப்பதை உணர்ந்தார்.
ஏற்கனவே ஏழைகள், கைவிடப்பட்டோர், அநாதைகள் குறித்த சிந்தனைகளில் நெருடப்பட்டிருந்த அவர் மனம் ஏழைகளுக்காகவும், கைவிடப்பட்ட நிலையில் வாழும் அநாதைகளுக்காகவும் குஷ்டரோகிகளுக்காகவும் ஒரு துறவற சபையை உருவாக்கும் சிந்தனைக்குள் ஆட்பட்டது.
ஆகவே தனது ஆன்ம குருவாகிய வான்எக்சம் அடிகளிடம் தனது எண்ணத்தை தெரிவித்து அவரின் நல்லாசியுடன் ஆயரின் அனுமதியையும் பெற்றார்.
அதன் பிரதிபலன் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் திகதி லொரேடோ சபையிலிருந்து வெளியேறி இந்திய கலாசாரத்திற்குள் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் விதத்தில் நீலநிறக் கோடுகளைக் கொண்ட வெள்ளை நிறச் சேலையை தூய்மையின் சின்னமாக தேர்ந்து கொண்டார்.
தொடர்ந்து மூன்று மாதம் மருத்துவ படிப்பினையை மேற்கொண்ட இவர் அதே வருடம் டிசெம்பர் 21 ஆம் திகதி முதல் பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர், யாருமற்ற அநாதைகள், காசநோய் மற்றும் குஷ்டரோகங்களால் அவதிப்பட்டோரை நாடிச் செல்லலானார். அவர்களுக்கு தஞ்சமளிக்கும் தாயானார்.
எந்தவொரு பணியிலும் ஏமாற்றங்கள் தாக்கங்கள் ஏற்படுவது இயல்பே. இதற்கு அன்னையும் விதிவிலக்கல்ல. அன்னையின் இந்தப் பயணத்திலும் அவர் பல்வேறு சவால்களை சந்திக்கலானார்.
யாவற்றையும் கருணையே வடிவான தனது புன்னகையால் வெற்றியும் கொண்டார். ஒருமுறை அன்னையவர் தனது அன்பு உறவுகளுக்காக உதவி கேட்டு ஒரு வர்த்தகரிடம் கையேந்தினார். ஆனால் அந்த வர்த்தகரோ அன்னையின் நோக்கத்தை உணராது அக்கரத்தின் மீது எச்சிலை உமிழ்ந்தார்.
உடனே அன்னையவர் அக்கரத்தை மடித்தபடி மறுகரத்தை நீட்டி எனக்குரியதை தந்து விட்டீர்கள். இனி அவர்களுக்காக உங்களால் முடிந்ததை தாருங்கள் என்றார்.
அன்னையின் செயலினால் மனம் நெகிழ்ந்து போன அந்த வர்த்தகர் தேவையான உதவியை வாரி வழங்கியதோடு, அந்த உதவிகளை அவர் தொடர்ந்தும் வழங்கியதாக தெரியவருகிறது.
இவ்வாறு அன்னையின் செயல்களால் ஈர்க்கப்பட்ட பலர் அவர் வழியில் பயணிக்க முன்வந்தனர்.
அவரின் இப்பணிகளை அவதானித்து வந்த கல்கத்தா மறை மாவட்ட திருச்சபை அன்னை உருவாக்கிய அன்பின் துறவற சபையை அங்கீகரித்தது.
1954 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி அச்சபையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். அத்துடன் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது சபை கன்னியர்களை நாட்டின் பல பகுதிகளுக்கும் பணியாற்ற அனுப்பி வைத்தார்.
1965 ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் இச்சபைக்கு தனது அங்கீகாரத்தை வழங்கினார்.
வெனிசுலா, உரோம், தன்சானியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இத்துறவற சபை வேர்விடத் தொடங்கியது.
அந்நாடுகளில் வாழும் ஏராளமான கன்னியர் இச்சபையினூடாக துறவறப் பணிக்குள் இணைந்து சேவையாற்ற முன்வந்தனர்.
மேலும் சபையின் உயர் நோக்கத்தை அறிந்த பெரும் செல்வந்தர்கள், அமைப்புகள், அரச மட்டத்திலான தூதரகங்கள் உதவிகளை வாரி வழங்கத் தொடங்கினர்.
மேலும் அன்னை அருட் தந்தையர், அருட் சகோதரர்கள், தனது மாணவர்களினதும் வறிய மக்களினதும் ஆன்மிக நலன் மற்றும் சேவைகளை கருத்திற் கொண்டு Missionaries of charity brothers, Contemplative branch of the sisters, Contemplative brothers The Missonaries of charity fathers, Day Missionaries of charity போன்ற பெயர்களில் பல அமைப்புகளை உருவாக்கினார்.
அத்துடன் பல அருட் தந்தையர்களின் வேண்டுகோளுக்கிணங்க இயேசுவின் திருவுடல், திரு இரத்த இயக்கத்தையும் ஆரம்பித்தார்.
இச்சபைகள் 1980 - 1990 காலப் பகுதியில் சோவியத் யூனியன், அல்பேனியா, கியூபா உள்ளடங்கலாக கொம்யூனிச நாடுகளிலும் ஸ்தாபிக்கப்பட்டது.
இவற்றினூடாக உலகின் பார்வை அவரின்பால் திரும்பியது. 1962 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது, 1979 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருது, 1996 ஆம் ஆண்டு அமெரிக்கா கௌரவ பிரஜை உரிமை என பல்வேறு விருதுகளும் அனைனையை நாடிவந்தன.
அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை திரேசா 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ம் திகதி இறைபாதமடைந்தார்.
அவர் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது அவரின் வழியில் சராசரியாக 5000 அருட் சகோதரிகள் பணியாற்றினர். அத்துடன் உலகின் 123 நாடுகளில் அன்பின் துறவற சபை 713 கிளைகளைக் கொண்டிருந்தது.
அன்னை திரேசா காலமாகிய பின் அவரில் விசுவாசங் கொண்டு கடும் புற்றுநோயினால் அவதிப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோனிகா பேஸ்ரா என்ற மாது அன்னையிடம் தனது புற்றுநோய் சுகமாக தினமும் மன்றாடிவந்தார்.
அதன்படியே அவர் பரிபூரணமாக குணமடைந்தமை நிரூபிக்கப்பட்டது. அத்துடன் மேலும் பல புதுமைகள் நிகழ்ந்தமையை காலஞ் சென்ற திருத்தந்தை 23 ஆம் அருளப்பர் சின்னப்பர் ஏற்றுக் கொண்டதுடன், அவர் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பினை ஏற்ற 25 வருட நிறைவு வெள்ளிவிழா திருப்பலியின் போது பல்லாயிரம் மக்கள் வத்திக்கானில் ஒன்று திரண்டிருக்க அன்னையை முத்திப் பேறுபெற்ற (அருளாளர்) திரேசா என பகிரங்கப்படுத்தினார்.
இதேவேளை, 1999-ல், அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இருபதாம் நூற்றாண்டின் அதிகமாகப் புகழப்பட்ட பெண்மணி என கணிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
Post a Comment