இந்த தொடருக்கான தகுதிச் சுற்று 17ம் தேதி மொகாலியில் தொடங்குகிறது. ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் 21ம் தேதி நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் மும்பை , ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன. சிஎல் டி20 தொடரின் பிரதான சுற்றில் பங்கேற்க வெஸ்ட் இண்டீசை சேர்ந்த டிரினிடாட் , டுபாகோ அணியும் தகுதி பெற்றுள்ளது.
ராஞ்சியில் 22ம் தேதி நடக்கும் லீக் ஆட்டத்தில், அந்த அணி பிரிஸ்பேன் ஹீட் அணியுடன் மோதுகிறது.
இந்த நிலையில், டிரினிடாட் அணியின் கவுரவ ஆலோசகராக முன்னாள் நட்சத்திரம் பிரையன் லாரா செயல்பட உள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறுகையில், ‘சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பங்கேற்க உள்ள டிரினிடாட் அணியின் கவுரவ ஆலோசகராக இந்தியா செல்வது மிகவும் பெருமையாக உள்ளது. அணி நிர்வாகி என்ற பொறுப்பில் இல்லாவிட்டாலும், வீரர்களுக்கு என்னால் இயன்ற அத்தனை உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளேன். டிரினிடாட் அணி மிகவும் வலுவானதாக அமைந்துள்ளது. இந்த தொடரில் நிச்சயம் வெற்றிகளைக் குவிப்போம்’ என்றார்.