Headlines News :
Home » , » கொம்புமுறி நிகழ்வை பற்றி அறிந்துகொள்ளுங்கள்

கொம்புமுறி நிகழ்வை பற்றி அறிந்துகொள்ளுங்கள்

Written By AKSHAYAN on Saturday, October 12, 2013 | 8:51 PM

சித்தாண்டி பிரதேசத்தில் கொம்பு முறி விளையாட்டு நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம்(13.10.2013) கொம்பு முறி விளையாட்டின் இறுதி நிகழ்வான கொம்பு உடைக்கும் நிகழ்வு இடம்பெற உள்ளது. கொம்பு முறி நிகழ்வு பற்றி பிரதேசத்திலுள்ளவர்கள் மற்றும் வாசிப்புக்கள் என்பவற்றிலிருந்து சேகரித்த தகவல்களை இங்கு நான் எழுதுகின்றேன்.


தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டுக்களுள் கொம்பு முறி ஒன்றாககக் காணப்படுகின்றது. இலங்கையில மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பாக இ;நிகழ்வு சித்தாண்டி, வந்தாறுமூலை, ஈரளக்குளம், கழுதாவளை முதலிய சில இடங்களில் நடைபெறுகின்றது. இந்தக் கொம்புமுறி நிகழ்வானது சிலப்பதிகாரத்துடன் தொடர்புடையதொன்றாககக் காணப்படுகின்றது.

தமிழ்நாட்டிலே கோவலன் ஒன்றொரு வாணிகன் இருந்தான். அவன் மனைவி பெயர் கண்ணகியாவாள் அதேவேளை மாதவியை தனது இரண்டாவது மனைவியாக திருமணம் முடித்திருந்தான். இவ்வாறிருக்கும்போது கோவலன் தன்னுடைய மனைவி கண்ணகியின் சிலம்பு  ஒன்றினை விற்றுவருவதற்கு மதுரைக்கு சென்றான். அதே காலப்பகுதியில் மதுரை மன்னனின் அரண்மனையிலிருந்து சிலம்பொன்றும் தொலைந்துபொயிருந்தது.
இந்தவேளையில் மன்னன் சிலம்பினை திருடியவரை கண்டுபிடித்து கொல்லுமாறு தனது வீரர்களுக்கு கட்டளையிட்டான். இதற்கமைவாக வீரர்களும் சிலம்பினை விற்க வந்த கோவலனை எதுவும் விசாரிக்காமல் சிலம்பு பற்றியும் ஆராயாமல் அவனை உடனே கொன்று விட்டார்கள்.
தனது கணவன் சிலம்பு திருடியவன் என்ற பேரில் கொலைசெய்யப்பட்டதை அறிந்து கண்ணணி கோபமுற்றாள். மன்னனின் அரண்மனைக்குச் தனது இன்னொரு சிலம்புடனும்; சென்று தனது கணவன் கள்வன் இல்லை என்பதை நிரூபித்ததுடன், மதுரை நகரையும் கோபத்தால் எரித்தாள்.
கோபத்துடன் தனது ஆய்ச்சியர் குலம் வந்த கண்ணகைக்கு தயிர் முதலியவற்றை கொடுத்து வெப்பம் தணிவித்தனர். ஆனால் அவளுடைய கோபம் குறையவில்லை. இந்தவேளையில் சிறுவர்கள் கொம்பு எனப்படும் இரண்டு வேரினால் ஆன வளைந்த தடியினை எடுத்து அதனை ஒன்று கோவலன் கட்சி என்றும், மற்யைதை கண்ணகி கட்சி என்றும் இழுத்து விளையாடினர். இறுதியில் கோவலன் கட்சியினுடைய கொம்பு முறிந்து போகும்படி செய்து 'கண்ணகிக்கே வெற்றி' என்று கூக்குரலிட்டனர். இதனைக் கண்ணுற்ற கண்ணகி தனது கோபம்நீங்கி தன்னை மறந்து சிரித்தாள்.
கண்ணகி வரும்போது அச்சிறுவர்களால் விளையாடப்பட்ட கொம்பு முறி நிகழ்வின்  வராலாற்றுச்சுரக்கமே கொம்பு முறி விளையாட்டு நிகழ்வு இடம்பெறுவதற்கு வழிசமைத்ததாகக் கூறப்படுகின்றது. மழைவளம் குன்றி நோய்கள் பருவுகின்றபோது இத்தகைய கொம்புமுறி நிகழ்வினை நடாத்தினால் கண்ணகி அம்மன் மனம் குளிர்ந்து மழை பெய்யும் என்பது இவ்விளையாட்டில் இந்துக்களின் நம்பிக்கையாகும்.

கொம்பு விளையாட்டின்போது கோவலனின் கட்சி வடசேரி எனவும், கண்ணகியின் கட்சி தென்சேரி எனவும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படும். பொதுவாக தந்தை வழியில் வருவதே கொம்புக்குரிய கட்சியாகும். குறிப்பாக ஒருவருடைய தந்தை வடசேரி என்றால் அவருடைய மகன் மற்றும் மகள் ஆகியோர் வடசேரியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர்.

கொம்பு விளையாட்டின்போது காட்டிலே உள்ள குறிப்பிட்ட ஒருவகை மரத்தின் வளைந்த வேரையே பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட இரண்டு பிரிவினரும் தனித்தனியே மந்திரகாரர்களுடன் சென்று மந்திர உச்சாடனத்துடன் கொம்பினைக் காட்டிலிருந்து கொண்டு வந்து ஆலயத்திற்கு சேர்ப்பார்கள். நிகழ்வு ஆரம்பத்தின்போது போர்த்தேங்காய் உடைக்கும் நிகழ்வு இடம்பெறும். இதன்பின்னர் வடசேரி தென்சேரி என இரண்டு பிரிவினராக ஊரிலுள்ளவாகள் அவரவர் பிரிவிற்கேற்ற வகையில் பிரிந்து செல்வார்கள்.
அவர்கள் தத்தமது கொம்பினை எடுத்துக்கொண்டு வசந்தன் கூத்து மற்றும் சில நிகழ்வுகளுடன் ஊரினை வலம் வருவார்கள். வலம் வரும்போது நாட்டு;புறப்பாடலுடன் பாடியவாறு வலம்வருவார்கள்.

இறுதியாகக் கொம்பு முறி நிகழ்வு இடம்பெறும் இதன்போது இரண்டு கொம்புகளையும் இணைத்துக்கடடி ஆலய்திலுள்ள ஒரு தாய்மரத்தில் கட்டுவதுடன், மற்றைய கயிறை பனை மரம் ஒன்றில் கட்டி நின்று இழுப்பார்கள். இதன்போது முறிந்துபோகின்ற கொம்பு உடைந்ததாகக் கொண்டு, உடையாத கொம்புப் பகுதியினர் வெற்றிபெற்றதாகக் கொள்ளப்படும். பொதுவாக தென்சேரி அதாவது கண்ணகிக்குரிய பகுதி வெற்றிபெறுவதே நல்லது என்பார்கள். ஏனெனில் கண்ணகி மனம் குளிர்ந்து மழைகிடைக்கும் என்ற ஐதீகம். இதனால் வடசேரி வென்றபோதிலும் கூட மஞ்சள் கொம்புஎன ஒன்று செய்து தென்சேரியை வெற்றிபெறச் செய்வார்கள்.

கொம்பு முறி நிகழ்வில் வெற்றி பெற்ற அணியினர் தமது வெற்றி பெற்ற கொம்புடன் ஊர்வலம் வருவார்கள். அதன்போது தோல்வியடைந்த பகுதினரின் வீடுகளின் முன்னால் நின்று அவர்களை பலவாறும் இழித்துரைப்பார்கள். இதன்போது தோல்வியடைந்த அணியினர் தமது வீட்டுகளுக்குள் ஒளிந்துகொண்டிருப்பார்கள். இவ்வாறு இந்தக் கொம்புமுறி நிகழ்வானது கிராமப் புறங்களில் சிறப்பாக இடம்பெறுகின்றது.


ஆக்கம்:- அக்‌ஷயன்


Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info