Headlines News :
Home » , » பாலியல் கொடூரத்துக்கு ஆளான சிறுமியை வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்

பாலியல் கொடூரத்துக்கு ஆளான சிறுமியை வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்

Written By Unknown on Friday, October 11, 2013 | 7:53 PM

இலங்கையில் மாத்தறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சிறுமி பாதுகாப்புக் காரணங்களுக்காக சேர்க்கப்பட்ட வெளிமாவட்ட பள்ளிக்கூடத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பள்ளி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாகவே இந்த முடிவினை எடுக்கத் தாம் தள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
தற்போது 15 வயதாகும் இந்தச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், ஆளும் அரசாங்கக் கூட்டணியின் உள்ளுராட்சி மன்றத் தலைவர் மீது வழக்கு விசாரணை நடந்துவருகின்றது.
குறித்த உள்ளூராட்சி மன்றத் தலைவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தென்னிலங்கையில் மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குடும்பத்தினர் அவரை வெளிமாவட்டப் பள்ளிக்கூடமொன்றில் சேர்ப்பித்தனர்.
ஆனால், தற்போது அந்தச் சிறுமியை பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றியுள்ள பள்ளிக்கூட தலைமை ஆசிரியர், தமக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்கள் வருவதாகக் கூறியுள்ளார்.
அதனால் மற்றப் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
அதனால் பள்ளிப்படிப்பு பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் பெற்றோர் நாட்டின் உச்சநீதிமன்றத்திடம் நீதிகேட்டு வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
மீண்டும் அதே பள்ளியில் சேர்த்துக்கொள்ளவேண்டும் அல்லது பதிலுக்கு வேறு பள்ளிக்கூடம் வழங்கப்பட வேண்டும் என்றும் நட்டஈடும் வேண்டும் என்று வழக்கில் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அரசியலின் பிடியில் சிக்கி அப்பாவிகளான தாம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தந்தை பிபிசியிடம் தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த ஆண்டில் மட்டும் சிறார்களுக்கு எதிராக சுமார் 3500 பாலியல் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால், மிகச் சொற்பமானவர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளுக்கு எதிராகவே பெரும்பாலான பாலியல் வல்லுறவு மற்றும் வன்முறைக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
அவர்களில் குறைந்தது இரண்டு உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மீது வழக்கு விசாரணை நடந்துவருகிறது.
இந்தச் செய்திகளை வெளியிட முயன்ற ஊடகவியலாளர்கள் சிலர் அச்சுறுத்தல் காரணமாக சொந்த இருப்பிடங்களை விட்டே வெளியேற நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info