வாஷிங்டன் : ரசாயன ஆயுதங்களை சிரியா ஒப்படைத்தால், அதன் மீதான தாக்குதல் நிறுத்தி வைக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரில் கடந்த மாதம் சரின் என்ற ரசாயன குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 1,429 பேர் பலியாயினர். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
ரசாயன குண்டை உபயோகித்த சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்கான பணியில் அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ரசாயன ஆயுதங்களை சர்வதேச அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு போரை தவிர்க்க வேண்டும் என சிரியாவுக்கு ரஷ்யா யோசனை வழங்கியது. இதை சிரியா அரசு வரவேற்றுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘‘ரசாயன ஆயுதங்களை சர்வதேச அமைப்பிடம் சிரியா ஒப்படைத்தால், அதன் மீதான ராணுவ தாக்குதலை நிறுத்தி வைப்பேன். சிரியா பிரச்னையை ராணுவ தாக்குதல் இல்லாமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கமுடியும் என நம்புகிறேன்’’ என்றார்.
எக்ஸ்ட்ரா தகவல்
சிரியாவில் பயன்படுத்தப்பட்ட சரின் ரசாயன குண்டு, சயனைடைவிட 100 மடங்கு விஷமானது. அதன் நெடியற்ற வாயுவை சுவாசித்தால் மறு நிமிடமே மரணம்தான்.