Headlines News :
Home » , , , » மீன்மழை பெய்வதற்கான காரணம்

மீன்மழை பெய்வதற்கான காரணம்

Written By AKSHAYAN on Wednesday, October 23, 2013 | 10:56 PM

மழைகாலங்களில் சில பகுதிகளில் மீன்மழை பெய்வது பற்றி அறிந்திருப்பார்கள். ஆனால் அது எவ்வாறு நிகழ்கின்றது என்பது பற்றி அனேகமானோர் அறிந்திருக்கமாட்டார்கள். இலங்கையிலும் கூட சில பகுதிகளில் மீன்மழை கடந்த காலங்களில் இடம்பெற்றது.


மீன் மழை மாத்திரமன்றி நீர்ப்பபாம்பு மழை, மற்றும் இறால் முதலிய ஏணை நீர்வாழ் சிறு உயிரிகளும் இவ்வாறு மழையின்போது மழையோடு நிலத்தில் விழுகின்றன. இத்தகைய நிகழ்விற்குரிய காரணத்தை விழக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது. மீன்மழை பற்றி அறிந்துகொள்ளவேண்டுமாயின் புயலின் ஒருவடிவமான சூறைப்புயல் (தொனோடா )பற்றி அறிந்துகொள்வது அவசியமாகும். 

 சூறைப்புயல் (தொனோடா ) என்றால் என்ன?

தொனோடா  என்பது சூறைப்புயல், சூறைக்காற்று, புயற்கிளம்பல் எனப் பலபெயர்களால் அழைக்கப்படுகின்றது.  மின்னலையும் இடியையும் தோற்றுவிக்கக்கூடிய முகிலொன்றின் உட்பகுதியிலிருந்து தொடங்கி நிலமட்டம் வரை நீட்சியடைந்த, கூடிய வேகத்துடன் சுழல்கின்ற வளிநிரலே  சூறைப்புயல் அல்லது தொனாடோ என அழைக்கப்படுகின்றது.  

சூறைப்புயலானது சூறாவளியின் வகையாக குறிப்பிடப்படகின்றபோதிலும், அவற்றின் உருவாக்கம் மற்றும் அவற்றின் வியாபகம் என்பவற்றின் அடிப்படையில் சூறாவளியிலிருந்து வேறுபட்டு அமைகின்றது.

சூறைப்புயலொன்றின் விட்டமானது 2 கிலோமீற்றர்கள் வரையில் காணப்படுகின்றது. புயலினுடைய சராசரி சுழற்சிவேகம்  மணித்தியாலத்திற்கு  120 – 500 கிலோமீற்றர்கள் வரையில் வேறுபடுகின்றது. இதேவேளை இவற்றின் நகர்வு வேகம் மணித்தியாலத்திற்கு 110 கிலோமீற்றர்கள் வரையில் காணப்படும்.

புயலினுடைய வளிநிரலின் மையப்பகுதியில் அமுக்கம் குறைவாக இருப்பதனால் தரையிலுள்ள பொருட்களை உறிஞ்சி மேல்நோக்கி எடுக்கின்றது.

மிகத் தாழ்ந்த அமுக்கங்களில், ஒடுங்கிய நீராவியினால் ஆக்கப்பட்ட நிரலொன்று உருவாகும் சந்தர்ப்பங்களில் சுழல்காற்று கண்ணுக்குப் புலப்படக் கூடியதாக இருக்கும். மழை மேகம் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் அவ்வேளைகளில் தோற்றமளிக்கும். சுழல்காற்று பெருமளவு புழுதியைக் கிளப்பிச் செல்லும் சந்தர்ப்பங்களிலும் கண்ணுக்குப் புலப்படக் கூடியதாக மாறும்.


சூறைப்புயல் (தொனோடா) எவ்வாறு உருவாகின்றது?
இடிமின்னல் முகிலை நோக்கி மேலே எழும்பும் வெப்பமான காற்றுக்களுக்கும், முகிலிலிருந்து கீழ்நோக்கி இறங்கும் குளிரான காற்றுக்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற சுழற்சியே சூறைப்புயலை உருவாக்குவதாக குறிப்பிடப்படுகின்றது. 

குளிர்ச்சியான காற்றுத்திணிவும், வெப்ப்மான காற்றுத்திணிவும் ஒன்றையொன்று சந்திக்கின்றபோது வளிமண்டலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்கி சுழலத் தொடங்குகின்றது. இதனால் தரையில் ஒரு ஸ்பிறிங் போன்ற சுழற்சி தோன்றுகின்றது. பின்னர் தொடர்ச்சியாக இந்தநிலைமையில் காற்றின் வேகம், திசை என்பன மாற்றமடைந்து இச்சுழற்சி குத்தாக மேல்நோக்கியதான ஒரு அசைவினை தோற்றுவிக்கின்றது. 

இவ்வாறு புவியிலிருந்து வானத்தை நோக்கி ஒரு புனல்போன்று சூறைக்காற்று விருத்தி பெற்றுவிடுகின்றது. விருத்திபெற்ற சூறைக்காற்றானது ஊடறுத்துச்செல்லும் பகுதிகளில் உள்ள பொருட்களை மேல்நோக்கி இழுத்துவீசுகின்றது.

மீன்மழை எவ்வாறு இடம்பெறுகின்றது?

 சூறைப்புயலானது சூறைக்காற்றானது நீர்ப்பரப்பொன்றில்  ஏற்படும்போது நீர் முகிலை நோக்கித் தாரையாக உறிஞ்சி இழுக்கப்படும். இத்தோற்றப்பாடு நீர் புனல்  (Water spout) என அழைக்கப்படுகின்றது.


நீர்ப்பரப்பின்மீது நிகழும் இத்தகைய தொனோடா நிகழ்வினால் அந்நீர்ப்பரப்பிலுள்ள  மீன்கள் முதலிய நீர்வாழ் உயிரினங்களும் நீரோடு சேர்த்து முகிலை நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்றன.  பின்னர்  மழையாகப் பொழிகின்றபோதே மீன்களும் நீரோடு சேர்ந்து கீழே விழுகின்றது. இதனையே மீன்மழை என அழைக்கின்றனர். இவ்வாறு மீன்மாத்திரமன்றி நீர்வாழ் உயிரினங்கள் வேறுசிலவும் இவ்வாறு வானிலிருந்து கீழே விழுவதற்கு இத்தகைய நீர்ப்பரப்பின்மீது இடம்பெறுகின்ற தொனோடா புயலின் செயற்பாடே காரணமாகும்.

(Articl By :- AKSHAYAN )

Video about Fish Rain




Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info